நெதர்லாந்தில் நடைபெற்ற டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
87-வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வந்தது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 14 சுற்றுகள் முடிவில் தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு சான்றாக உள்ளதாகவும், இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் பெற்ற வெற்றி பிரக்ஜானந்தாவின் திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர், இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.