ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு
2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கி வைத்த தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு விருந்தினர் மாளிகையான ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “இரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாது போன்ற முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கிற போது சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய கருத்துக்களை மாநில அரசுகளிடம் கேட்டிருக்க வேண்டும் என்பதே தமிழக அரச நிலைப்பாடு, மாநிலத்திலிருந்து நிறைய நபர்கள் உள்ளனர், மாநில அரசாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் முறைப்படி இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. அப்போது திமுக எதிர்த்து உள்ளது. அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளை பிற்காலத்தில் எடுக்கும் போதும் மாநில அரசுகளாக இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமும் இது போன்ற விஷயங்களில் கொள்கை முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசனை செய்திருந்தால் முறையாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.