Homeசெய்திகள்தமிழ்நாடுஎஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

-

- Advertisement -

தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ  திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும் என்றும், ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

tamilnadu assembly

இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘ஒரே வார்த்தையில் அழைத்தோம் – மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்’ என்று கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதேபோன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை அழைத்து, பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்ட மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? என்றும் வினவியுள்ளார்.

edappadi palanisamy
edappadi palanisamy

மேலும், இரட்டை வேடம் போடும் திமுக-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் உரத்த குரலில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை போராடி பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

MUST READ