ஒடிசா விபத்து- முதல்வருக்கு திருமாவளவன் பாராட்டு
ஒடிசாவில் நடந்த கோர இரயில் விபத்து நெஞ்சை உறைய வைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஒடிசா பாலசோர் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்து நடைபெறும் இடத்திற்கு தமிழக குழு, அமைச்சர்களை அனுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் நடந்த கோர இரயில் விபத்து நெஞ்சை உறைய வைக்கிறது. ற்றுக் கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடுமெனத் தெரியவருகிறது. இது இந்திய வரலாற்றில் விவரிக்க இயலாத பெருந்துயரமாகும். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதாக இருந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்த செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அத்துடன், மீட்புப் பணிகளில் ஒடிசா அரசுடன் இணைந்து செயல்படுகிறார். தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். இன்றைய நாளை துக்கநாளாகக் கடைபிடிக்கவும் ஆணையிட்டுள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன. மாண்புமிகு முதல்வருக்கு எமது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.