திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவனை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்று பாடப் பிரிவில், அந்த வகுப்பில் பள்ளியின் கணக்குப் பதிவியல் ஆசிரியரான சிவகுமார் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் அந்த வகுப்பிற்குள் திடீரென சென்று வகுப்பிலிருந்த மாணவர் ஒருவரை அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். இதனைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். அதில் வெட்டுப்பட்ட மாணவருக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டவுடன் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் சிவக்குமார் அதை தடுக்க முயன்ற போது அவரையும் அந்த மாணவர் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த மாணவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் தப்பியோடிய மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளியில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வகுப்பறைக்குள் நுழைந்து மாணவரையும் ஆசிரியரையும் பள்ளியில் பயிலும் சக மாணவர் வெட்டிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.