நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை?- திருச்சி சிவா
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பொறுப்புணர்வோடு பதில் அளிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “பிரதமர் மோடி இந்தியாவில் ஒரு உயிர் போனாலும் அதற்கு பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் பல நாட்களாக மணிப்பூர் பிரச்சனை இருந்து வரும் நிலையில், பிரதமர் விழாக்களில் கலந்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டுகிறார். கலவரத்தை தான் அவர்கள் விரும்புகிறார்களா என்று தெரியவில்லை. இந்த பிரச்சனை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பொறுப்போடு பதில் சொல்ல வேண்டும். அதன் பின் எதிர்க்கட்சிகள் தங்களின் வாதங்களை வைப்பார்கள்.
நாடாளுமன்றத்தை பிரதமர் புறக்கணிக்கிறார். எதிர்க்கட்சிகளை கேவலப்படுத்துகிறார். நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை? மக்களுகை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை”