நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதா? ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு நிதியின் கீழ் 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் டெலிகோபால்ட் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து 2.35 கோடி மதிப்பிலான நீராவி சலவையாக கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் 2.2 கோடி ரூபாய் மதிப்பிலான அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராயப்பேட்டை மருத்துவமனை பல் மருத்துவத்துறையில் மருத்துவ உபகரணங்கள் 50 லட்சம் ரூபாய்க்கு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.
நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தான் பொருள் என்று ஆளுநர் பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 42ககும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம். இது மாநில சுயாட்சிக்கு இழைக்கப்பட்ட இழுக்கு. இது குறித்து முதலமைச்சர் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் எடுப்பார்” என பேசினார்.