சென்னை புறநகரில் கொட்டி தீர்த்த கன மழையினால் ரயில் சேவை, விமான சேவை பாதிப்படைந்தது. அதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.
ஆவடியில் நேற்று இரவு 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது. ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு காற்று அடிக்காமல், இடி இடிக்காமல் நின்று நிதானமாக மூன்று மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது.
மழை பெய்த போது ஆவடி ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் இரவு 10:30 முதல் 2.30 மணி வரை ரயில் சேவை இல்லாமல் பொது மக்கள் பாதிப்படைந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் விரைவு ரயில் செல்லக்கூடிய பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமாக பணி முடித்து இரவு வீட்டிற்கு ரயிலில் பெரும்பாலனவர்கள் செல்வார்கள். சென்னை அரக்கோணம் மார்க்கமாக திருத்தணி திருப்பதி செல்லக்கூடிய லோக்கல் மின்சார ரயில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில் சேவை இல்லாததால் ஆவடி ரயில் நிலைய மேலாளரிடம் முறையிட பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது ரயில் நிலையத்தில் மேலாளர் இல்லாததும்,ரயில் பயண சீட்டு வழங்கக்கூடிய வட இந்திய ரயில்வே ஊழியர் பொதுமக்களிடம் முறையான பதில் கூறாமலும் பயணிகளை உதாசின படுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சரக்கு ரயிலை வழிமறித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ரயில் சேவை இல்லாததால் அம்பத்தூர் திருமுல்லைவாயில் அண்ணனூர் போன்ற ரயில் நிலையங்களில் காத்திருந்த ரயில் பயணிகள் தண்டவாளத்தில் செல்போன் டார்ச் லைட் பயன்படுத்தி சிலர் நடந்தே சென்றனர்.
அதேபோன்று நேற்று இரவு கொட்டிய மழையில் ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை மூழ்கியது. சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய கோபாலபுரம், சேக்காடு பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் புறநகரில் நேற்று இரவு பெய்த கன மழையினால் சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. அதனால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து 68 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேஸ்வர் உள்ளிட்ட 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில், வட்டமடித்து தத்தளித்துக் கொண்டிருந்தன.
சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட 20 விமானங்கள் 2 மணி நேரம் வரை, தாமதமாக புறப்பட்டு சென்றன.இலங்கையில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், நேற்று இரவு ரத்து செய்யப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று புதன்கிழமை மாலையில் இருந்து விட்டு விட்டு, மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு 9 மணிக்கு மேல், மிகவும் கனமழையாக மாறி, இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது.
இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில், கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.
நேற்று இரவு பெங்களூர்,
மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு, திருச்சி, திருவனந்தபுரம், கோலாலம்பூர் உட்பட 13 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து, தத்தளித்துக் கொண்டு இருந்தன. அவ்வப்போது மழை சிறிது ஓயும் போது, வட்டமடித்து பறந்து கொண்டு இருந்த விமானங்கள், அவசரமாக சென்னையில் தரையிறங்கின. ஆனால் திருச்சியில் இருந்து 68 பயணிகளுடன் சென்னைக்கு இரவு 10.05 மணிக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால், வானில் தொடர்ந்து வட்டம் அடிக்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றது.
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர், சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட 20 விமானங்கள், சுமார் 2 மணி நேரம் வரை, தாமதமாக புறப்பட்டு சென்றன.
அதோடு நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அதேபோல் சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன.
இதைப்போல் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை இடி மின்னல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 13 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள், ரத்தான 2 விமானங்கள், மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.