கனடா நாட்டின் புதிய பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வடஅமெரிக்க நாடான கனடாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பிரதமராகவும், ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும் ஜஸ்டின் ட்ரூடோ (53) பொறுப்பு வகித்து வந்தார். உலக தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான பிரதமராக அறியப்பட்ட ட்ரூடோ, காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். மேலும் கனடாவில் விலைவாசி உயர்வு, அகதிகள் குடியேற்ற விவகாரம் தொடர்பாக ட்ரூடோவுக்கு எதிராக ஆளுங்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ட்ரூடோ அறிவித்தார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் தொடர்வதாகவும் ட்ரூடோ கூறினார்.

இதனை தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கடனா நாட்டின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான 59 வயதான மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11,134 வாக்குகளும், கரீனா கோல்ட் 4,785 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவை தங்கள் நாட்டின் 51வது மாகாணமாக இணைக்க முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கடனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்துள்ளார். இந்நிலையில், டொனால்டு டிரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக கனடா நாட்டு மக்கள் கார்னியை அங்கீகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மார்க் கார்னி ஒருமுறை டொனால்டு டிரம்ப்பை ‘ஹாரி பாட்டர்’ கதையில் வரும் வில்லன் கதாபாத்திரமான வோல்டெமார்ட்டுடன் ஒப்பிட்டு பேசியிருந்த நிலையில், தற்போது அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.