Homeதிருக்குறள்18 – வெஃகாமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

18 – வெஃகாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

18 – வெஃகாமை, கலைஞர் குறல் விளக்கம்  , திருக்குறள்.

171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
        குற்றமும் ஆங்கே தரும்.

கலைஞர் குறல் விளக்கம்  – மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
        நடுவன்மை நாணு பவர்.

கலைஞர் குறல் விளக்கம்  – நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காகப் பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்.

173. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
        மற்றின்பம் வேண்டு பவர்.

கலைஞர் குறல் விளக்கம்  – அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.

174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
        புன்மையில் காட்சி யவர்.

கலைஞர் குறல் விளக்கம்  – புலனடக்கம் வாய்ந்த தூயவர். வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.

175. அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
        வெஃகி வெறிய செயின்.

கலைஞர் குறல் விளக்கம்  – யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?

176. அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
        பொல்லாத சூழக் கெடும்.

கலைஞர் குறல் விளக்கம்  – அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாது செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
         மாண்டற் கரிதாம் பயன்.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

178. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
        வேண்டும் பிறன்கைப் பொருள்.

கலைஞர் குறல் விளக்கம்  – தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
         திறனறிந் தாங்கே திரு.

கலைஞர் குறல் விளக்கம்  – பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
         வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

கலைஞர் குறல் விளக்கம்  – விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும் அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.

MUST READ