Homeதிருக்குறள்24 – புகழ் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

24 – புகழ் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
        தூதிய மில்லை உயிர்க்கு.

கலைஞர் குறல் விளக்கம்  – கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

232. உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
        றீவார்மேல் நிற்கும் புகழ்.

கலைஞர் குறல் விளக்கம்  – போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

233. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
        பொன்றாது நிற்பதொன் றில்.

கலைஞர் குறல் விளக்கம்  – ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
        போற்றாது புத்தே ளுலகு.

கலைஞர் குறல் விளக்கம்  – இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து. அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

235. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
        வித்தகர்க் கல்லால் அரிது.

கலைஞர் குறல் விளக்கம்  – துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
        தோன்றலின் தோன்றாமை நன்று.

கலைஞர் குறல் விளக்கம்  – எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
        இகழ்வாரை நோவ தெவன்.

கலைஞர் குறல் விளக்கம்  – உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
        எச்சம் பெறாஅ விடின்.

கலைஞர் குறல் விளக்கம்  – தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால் அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும்.

239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
        யாக்கை பொறுத்த நிலம்.

கலைஞர் குறல் விளக்கம்  – புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
        வாழ்வாரே வாழா தவர்.

கலைஞர் குறல் விளக்கம்  – பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

MUST READ