Homeதிருக்குறள்25  - அருளுடைமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

25  – அருளுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

25  - அருளுடைமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

241. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
        பூரியார் கண்ணு முள.

கலைஞர் குறல் விளக்கம்  – கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.

242. நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
        தேரினும் அஃதே துணை.

கலைஞர் குறல் விளக்கம்  – பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.

243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
        இன்னா உலகம் புகல்.

கலைஞர் குறல் விளக்கம்  – அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

244. மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
        தன்னுயி ரஞ்சும் வினை.

கலைஞர் குறல் விளக்கம்  – எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

245. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
        மல்லன்மா ஞாலங் கரி.

கலைஞர் குறல் விளக்கம்  – உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

246. பொருள் நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள் நீங்கி
        அல்லவை செய்தொழுகு வார்.

கலைஞர் குறல் விளக்கம்  – அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர் களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

247. அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
        கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

கலைஞர் குறல் விளக்கம்  – பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.

248. பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
        அற்றார்மற் றாதல் அரிது.

கலைஞர் குறல் விளக்கம்  – பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
        அருளாதான் செய்யும் அறம்.

கலைஞர் குறல் விளக்கம்  – அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.

250. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
        மெலியார்மேற் செல்லு மிடத்து.

கலைஞர் குறல் விளக்கம்  – தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

MUST READ