Homeதிருக்குறள்30 – வாய்மை -  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

30 – வாய்மை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

30 – வாய்மை -  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

291. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
        தீமை யிலாத சொலல்

கலைஞர் குறல் விளக்கம்  – பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

292. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
         நன்மை பயக்கு மெனின்

கலைஞர் குறல் விளக்கம்  – குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

293. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
        தன்நெஞ்சே தன்னைச் சுடும்

கலைஞர் குறல் விளக்கம்  – மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
        உள்ளத்து ளெல்லாம் உளன்

கலைஞர் குறல் விளக்கம்  – மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
        தானஞ்செய் வாரின் தலை

கலைஞர் குறல் விளக்கம்  – உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும்,தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர் களாவார்கள்.

296. பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
        எல்லா அறமுந் தரும்.

கலைஞர் குறல் விளக்கம்  – பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
        செய்யாமை செய்யாமை நன்று

கலைஞர் குறல் விளக்கம்  – செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

298. புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
        வாய்மையால் காணப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்;மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
        பொய்யா விளக்கே விளக்கு

கலைஞர் குறல் விளக்கம்  – புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

300. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
        வாய்மையின் நல்ல பிற

கலைஞர் குறல் விளக்கம்  – வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

MUST READ