301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
கலைஞர் குறல் விளக்கம் – தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
302. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற
கலைஞர் குறல் விளக்கம் – வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை.
303. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்
கலைஞர் குறல் விளக்கம் – யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
304. நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற
கலைஞர் குறல் விளக்கம் – சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.
305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
கலைஞர் குறல் விளக்கம் – ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால். சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம். அவனை அழித்துவிடும்.
306. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
கலைஞர் குறல் விளக்கம் – சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சின மென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமன்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
கலைஞர் குறல் விளக்கம் – நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
308. இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
கலைஞர் குறல் விளக்கம் – தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்
கலைஞர் குறல் விளக்கம் – உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றை யெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
310. இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
கலைஞர் குறல் விளக்கம் – எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.