Homeதிருக்குறள்33 - கொல்லாமை -  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

33 – கொல்லாமை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

33 - கொல்லாமை -  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
        பிறவினை எல்லாந் தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

322. பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
        தொகுத்தவற்று ளெல்லாந் தலை

கலைஞர் குறல் விளக்கம்  – இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.

323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
        பின்சாரப் பொய்யாமை நன்று

கலைஞர் குறல் விளக்கம்  – அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

324. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
        கொல்லாமை சூழும் நெறி

கலைஞர் குறல் விளக்கம்  – எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

325. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
       கொல்லாமை சூழ்வான் தலை

கலைஞர் குறல் விளக்கம்  – உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
        செல்லா துயிருண்ணுங் கூற்று

கலைஞர் குறல் விளக்கம்  – கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

327. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
       தின்னுயிர் நீக்கும் வினை

கலைஞர் குறல் விளக்கம்  – தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.

328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
        கொன்றாகும் ஆக்கங் கடை

கலைஞர் குறல் விளக்கம்  – பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள். அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
        புன்மை தெரிவா ரகத்து

கலைஞர் குறல் விளக்கம்  – பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம்.இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.

330. உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
       செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

கலைஞர் குறல் விளக்கம்  – வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர். ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.

MUST READ