Homeதிருக்குறள்37 -  அவா அறுத்தல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

37 –  அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

37 -  அவா அறுத்தல் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
        தவாஅப் பிறப்பீனும் வித்து

கலைஞர் குறல் விளக்கம்  – ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
        வேண்டாமை வேண்ட வரும்

கலைஞர் குறல் விளக்கம்  – விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

363. வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
        ஆண்டும் அஃதொப்ப தில்

கலைஞர் குறல் விளக்கம்  – தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

364. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
        வாஅய்மை வேண்ட வரும்

கலைஞர் குறல் விளக்கம்  – தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும், அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

365. அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
       அற்றாக அற்ற திலர்

கலைஞர் குறல் விளக்கம்  – ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார், முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

366. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
        வஞ்சிப்ப தோரும் அவா

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும், எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
        தான்வேண்டு மாற்றான் வரும்

கலைஞர் குறல் விளக்கம்  – கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

368. அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
        தவாஅது மேன்மேல் வரும்

கலைஞர் குறல் விளக்கம்  – ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

369. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
        துன்பத்துள் துன்பங் கெடின்

கலைஞர் குறல் விளக்கம்  – பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
        பேரா இயற்கை தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

MUST READ