391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கலைஞர் குறல் விளக்கம் – பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
392. எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
கலைஞர் குறல் விளக்கம் – எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.
393. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
கலைஞர் குறல் விளக்கம் – கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
கலைஞர் குறல் விளக்கம் – மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
கலைஞர் குறல் விளக்கம் – அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று. மேலும் கற்றுக் கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளா தவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.
396. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
கலைஞர் குறல் விளக்கம் – தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
கலைஞர் குறல் விளக்கம் – கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?
398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
கலைஞர் குறல் விளக்கம் – ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
399. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
கலைஞர் குறல் விளக்கம் – தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு. அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
400. கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
கலைஞர் குறல் விளக்கம் – கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.