Homeதிருக்குறள்42 - கேள்வி- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

42 – கேள்வி- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

கேள்வி- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
        செல்வத்து ளெல்லாந் தலை

கலைஞர் குறல் விளக்கம்  – செழுமையான கருத்துக்களைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
        வயிற்றுக்கும் ஈயப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
       ஆன்றாரோ டொப்பர் நிலத்து

கலைஞர் குறல் விளக்கம்  – குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

414. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
       கொற்கத்தின் ஊற்றாந் துணை

கலைஞர் குறல் விளக்கம்  – நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால். அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

415. இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
        ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

கலைஞர் குறல் விளக்கம்  – வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
        ஆன்ற பெருமை தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
        தீண்டிய கேள்வி யவர்

கலைஞர் குறல் விளக்கம்  – எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள். சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
        தோட்கப் படாத செவி

கலைஞர் குறல் விளக்கம்  – இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
        வாயின ராத லரிது

கலைஞர் குறல் விளக்கம்  – தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள் அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
        அவியினும் வாழினு மென்

கலைஞர் குறல் விளக்கம்  – செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

MUST READ