Homeதிருக்குறள்43 – அறிவுடைமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

43 – அறிவுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

43 – அறிவுடைமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
        உள்ளழிக்க லாகா அரண்

கலைஞர் குறல் விளக்கம்  – பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

422. சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
        நன்றின்பா லுய்ப்ப தறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
        நுண்பொருள் காண்ப தறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

425. உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
        கூம்பலு மில்ல தறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்புக்கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

426. எவ்வ துறைவ துலக முலகத்தோ
        டவ்வ துறைவ தறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

427. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
        அஃதறி கல்லா தவர்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
        தஞ்சல் அறிவார் தொழில்

கலைஞர் குறல் விளக்கம்  – அறிவில்லாதவர்கள்தாம் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

429. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
        அதிர வருவதோர் நோய்

கலைஞர் குறல் விளக்கம்  – வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

430. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
        என்னுடைய ரேனு மிலர்

கலைஞர் குறல் விளக்கம்  – அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை: அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

MUST READ