Homeதிருக்குறள்46 - சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

46 – சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

46 - சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
        சுற்றமாச் சூழ்ந்து விடும்

கலைஞர் குறல் விளக்கம்  – பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பது போல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.

452. நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
        கினத்தியல்ப தாகும் அறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
        இன்னா னெனப்படுஞ் சொல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.

454. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
        கினத்துள தாகும் அறிவு

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

455. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
        இனந்தூய்மை தூவா வரும்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.

456. மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
        கில்லைநன் றாகா வினை

கலைஞர் குறல் விளக்கம்  – மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

457. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
        எல்லாப் புகழுந் தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.

458. மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
        கினநலம் ஏமாப் புடைத்து

கலைஞர் குறல் விளக்கம்  – மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும்.

459. மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
        இனநலத்தி னேமாப் புடைத்து

கலைஞர் குறல் விளக்கம்  – நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.

460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
       அல்லற் படுப்பதூஉ மில்

கலைஞர் குறல் விளக்கம்  – நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

MUST READ