Homeதிருக்குறள்53 - சுற்றந் தழால்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

53 – சுற்றந் தழால்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

53 - சுற்றந் தழால்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
        சுற்றத்தார் கண்ணே உள

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

522. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
       ஆக்கம் பலவுந் தரும்

கலைஞர் குறல் விளக்கம்  – எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
       கோடின்றி நீர்நிறைந் தற்று

கலைஞர் குறல் விளக்கம்  – உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

524. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
        பெற்றத்தாற் பெற்ற பயன்

கலைஞர் குறல் விளக்கம்  – தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

525. கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
        சுற்றத்தாற் சுற்றப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

526. பெருங்கொடையாள் பேணான் வெகுளி அவனின்
        மருங்குடையார் மாநிலத் தில்

கலைஞர் குறல் விளக்கம்  – பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

527. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
        அன்னநீ ரார்க்கே உள

கலைஞர் குறல் விளக்கம்  – தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும், அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
        அதுநோக்கி வாழ்வார் பலர்

கலைஞர் குறல் விளக்கம்  – அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

529. தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
        காரண மின்றி வரும்

கலைஞர் குறல் விளக்கம்  – உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
        இழைத்திருந் தெண்ணிக் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

MUST READ