Homeதிருக்குறள்55 – செங்கோன்மை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

55 – செங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

55 – செங்கோன்மை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
        தேர்ந்துசெய் வஃதே முறை

கலைஞர் குறல் விளக்கம்  – குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
        கோனோக்கி வாழுங் குடி

கலைஞர் குறல் விளக்கம்  – உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
        நின்றது மன்னவன் கோல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

544. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
       அடிதழீஇ நிற்கும் உலகு

கலைஞர் குறல் விளக்கம்  – குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

545. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
        பெயலும் விளையுளுந் தொக்கு

கலைஞர் குறல் விளக்கம்  – நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது. பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

546. வேலன்று வென்றி தருவது மன்னவன்
        கோலதூஉங் கோடா தெனின்

கலைஞர் குறல் விளக்கம்  – ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேல்ல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
        முறைகாக்கும் முட்டாச் செயின்

கலைஞர் குறல் விளக்கம்  – நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
        தண்பதத்தான் தானே கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
        வடுவன்று வேந்தன் தொழில்

கலைஞர் குறல் விளக்கம்  –குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
        களைகட் டதனொடு நேர்

கலைஞர் குறல் விளக்கம்  – கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை. ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

MUST READ