Homeதிருக்குறள்56 – கொடுங்கோன்மை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

56 – கொடுங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

56 – கொடுங்கோன்மை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
        டல்லவை செய்தொழுகும் வேந்து

கலைஞர் குறல் விளக்கம்  – அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

552. வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்
        கோலொடு நின்றான் இரவு

கலைஞர் குறல் விளக்கம்  – ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது. வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

553. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
        நாடொறும் நாடு கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

554. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
        சூழாது செய்யும் அரசு

கலைஞர் குறல் விளக்கம்  – நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

555. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
         செல்வத்தைத் தேய்க்கும் படை

கலைஞர் குறல் விளக்கம்  – கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
        மன்னாவாம் மன்னர்க் கொளி

கலைஞர் குறல் விளக்கம்  – நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்குப் புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

557. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
        அளியின்மை வாழும் உயிர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்  – மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள்.

558. இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
        மன்னவன் கோற்கீழ்ப் படின்

கலைஞர் குறல் விளக்கம்  – வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக்கூடியது.

559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
        ஒல்லாது வானம் பெயல்

கலைஞர் குறல் விளக்கம்  – முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
        காவலன் காவான் எனின்

கலைஞர் குறல் விளக்கம்  – ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.

MUST READ