Homeதிருக்குறள்57 - வெருவந்த செய்யாமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

57 – வெருவந்த செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

57. வெருவந்த செய்யாமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
        ஒத்தாங் கொறுப்பது வேந்து

கலைஞர் குறல் விளக்கம்  – நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

562. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
        நீங்காமை வேண்டு பவர்

கலைஞர் குறல் விளக்கம்  – குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
        ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
        உறைகடுகி ஒல்லைக் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
        பேஎய்கண் டன்ன துடைத்து

கலைஞர் குறல் விளக்கம்  – யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்

566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
        நீடின்றி ஆங்கே கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர் களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.

567. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
        அடுமுரண் தேய்க்கும் அரம்

கலைஞர் குறல் விளக்கம்  – கடுஞ்சொல்லும் முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
        சீறிற் சிறுகுந் திரு

கலைஞர் குறல் விளக்கம்  – கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
        வெருவந்து வெய்து கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன் போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

570. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
        தில்லை நிலக்குப் பொறை

கலைஞர் குறல் விளக்கம்  – கொடுங்கோல் அரசு, படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும். அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

MUST READ