Homeதிருக்குறள்58 – கண்ணோட்டம் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

58 – கண்ணோட்டம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

58 – கண்ணோட்டம் , கலைஞர் குறல் விளக்கம்  , திருக்குறள்,

571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
        உண்மையான் உண்டிவ் வுலகு

கலைஞர் குறல் விளக்கம்  – இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

572.கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
       உண்மை நிலக்குப் பொறை

கலைஞர் குறல் விளக்கம்  – அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

573. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்              கண்ணோட்டம் இல்லாத கண்

கலைஞர் குறல் விளக்கம்  – இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
        கண்ணோட்டம் இல்லாத கண்

கலைஞர் குறல் விளக்கம்  – அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும்.

575. கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
        புண்ணென் றுணரப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல: புண்.

576. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
        டியைந்துகண் ணோடா தவர்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார்.

577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
        கண்ணோட்டம் இன்மையும் இல்

கலைஞர் குறல் விளக்கம்  – கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும். கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

578. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
        குரிமை உடைத்திவ் வுலகு

கலைஞர் குறல் விளக்கம்  – கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மை யாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
        பொறுத்தாற்றும் பண்பே தலை

கலைஞர் குறல் விளக்கம்  – அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

580. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
         நாகரிகம் வேண்டு பவர்

கலைஞர் குறல் விளக்கம்  – கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள். தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

MUST READ