Homeதிருக்குறள்61 - மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

61 – மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

61 - மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
        மாசூர மாய்ந்து கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

602. மடியை மடியா ஒழுகல் குடியைக்
        குடியாக வேண்டு பவர்

கலைஞர் குறல் விளக்கம்  – குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
        குடிமடியுந் தன்னினு முந்து

கலைஞர் குறல் விளக்கம்  – அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
        மாண்ட உஞற்றி லவர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்  – சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்: குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
        கெடுநீரார் காமக் கலன்

கலைஞர் குறல் விளக்கம்  – காலம் தாழ்த்துதல்,மறதி சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

606. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
        மாண்பயன் எய்தல் அரிது

கலைஞர் குறல் விளக்கம்  – தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

607.இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
       மாண்ட உஞற்றி லவர்

கலைஞர் குறல் விளக்கம்  – முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

608. மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
        கடிமை புகுத்தி விடும்

கலைஞர் குறல் விளக்கம்  – பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

609. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
        மடியாண்மை மாற்றக் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

610. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
        தாஅய தெல்லாம் ஒருங்கு

கலைஞர் குறல் விளக்கம்  – சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன். அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

MUST READ